அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது உணவு வகைக்காக மட்டும் ரூ. 1.15 கோடி செலவானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த செலவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த விவகாரத்தை தொடர்ந்து அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆறுமுகசாமி கமிஷனில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் தங்களது மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறி, மருத்துவர்களை அனுப்ப அப்போலோ நிர்வாகம் மறுத்து வருகிறது.
ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராக தங்களது மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது உணவு வகைக்காக மட்டும் ரூ. 1.15 கோடி செலவானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது மாநிலம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை மையப்படுத்தி ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகின.
இந்த நிலையில், ரூ. 1.15 கோடி உணவுக்காக செலவானது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார் என்றும், அவரைப் பார்க்க வந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அவர்களது உதவியாளர்களும் சாப்பிட்டதால் ரூ. 1.15 கோடி வரைக்கும் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.