பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் இந்தியாவிற்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை கெடுக்கும் வகையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த பெரும் தாக்குதல் முயற்சி இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் பயன்படுத்த இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணிவெடி மற்றும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-24 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அமைதியை கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சினார் படைப்பிரிவு கமாண்டர் மற்றும் இந்திய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரலான கே.ஜே.எஸ்.தில்லான், பாகிஸ்தானின் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணிவெடி மற்றும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-24 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவமும் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 10,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மேலும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலம் வந்துள்ள சுற்றுலா பயணிகளும் திரும்பிப் போகுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் திரும்பிப் போக காஷ்மீர் அரசு அறிவுறுத்தியுள்ளது.