This Article is From Jan 28, 2020

அமைச்சரை விமர்சித்தால் கைதா? இனி திமுகவினரை தொட்டால்.. எச்சரித்த மு.க.ஸ்டாலின்!

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் “அதிகாரம்” என்ற “ஆணவம்” ஏறிக் கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடானது

Advertisement
தமிழ்நாடு Edited by

அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள்தான் - மு.க.ஸ்டாலின்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக திமுகவினர் கைது செய்யப்படுவது தொடர்ந்தால், நானே கோவைக்கு சென்று மக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபடவேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரசூர் கிராம சபை கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து பேசியதற்காக திமுக நிர்வாகி ஏ.வி.முத்துலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் “அதிகாரம்” என்ற “ஆணவம்” ஏறிக் கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடானது.

அண்மைக் காலமாக கோயம்புத்தூரிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரைக் கைது செய்வது, வழக்குப் போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் தி.மு.க.வினரைச் சிறைப் பிடிப்பது என அட்டூழியத்திலும் அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் ‘பேயாட்டம்' போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள்தான். அதன் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் காவல்துறை அதிகாரிகளும், அவருடைய தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் தி.மு.க.வினரைக் கைது செய்து துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளும், நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

சட்டத்தின் ஆட்சியை' அமைச்சரின் ஆணைக்கேற்ற ‘சர்வாதிகார ஆட்சியாக' மாற்றும் அநியாயத்திற்கு, காவல்துறை கிஞ்சித்தும் துணை போகக்கூடாது. அப்படித் துணை போய், ஒழுக்கக் கேடு தாராளமாக உள்ளே நுழைந்து விடாமல், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறைத் தலைவர் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டால் - நானே கோவைக்கு வந்து - மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.!

Advertisement