This Article is From Dec 16, 2018

கலைஞர் சிலை திறப்பு விழா: சென்னை வரும் சோனியா - ராகுலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கலைஞர் சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
தெற்கு Posted by

கலைஞர் சிலை திறப்பு விழாவிற்காக இன்று சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

கலைஞர் சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று (டிசம்பர் 16-ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதில், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைய உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், திமுகவின் அழைப்பை ஏற்று இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணி அளவில் 2 சிலைகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் கலந்து கொண்டு கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கிறார்.

Advertisement

சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
 

Advertisement