தமிழகத்தில் அதிமுக மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்துள்ளது.
Chennai: சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்கு தன்மையும் கொண்ட செயல்களாகவே மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370 யை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகின்றன.
தமிழகத்தில் இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் கமல் தலைமையிலான மக்கள் நீதிமய்யம் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
370 மற்றும் 35 ஏ ஆகிய சட்ட பிரிவுகளை நீக்கி விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரும் தாக்குதல். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கிற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவை எடுத்திருக்கின்றது.
இதுதொடர்பாக தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்கு தன்மையும் கொண்ட செயல்களாகவே மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.