”நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்” என பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்ற மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, நேற்றைய தினம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னதாக இந்த பதவியேற்பு விழாவுக்கு ஆம் ஆத்மி தரப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த ட்வீட்டர் பதிவுக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, உங்களது வாழ்த்துக்கு நன்றிகள்.
நீங்கள் விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று எண்ணினேன். எனினும், உங்களது சூழ்நிலையை புரிந்துக்கொள்கிறேன். இந்தியர்கள் டெல்லியை பெருமையாக கருதும் அளவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக நாம் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவாலும், 6 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மீதமுள்ள 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி, டெல்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள 8 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு ஆம் ஆத்மி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதிக்கு சென்றுவிட்டதால், அவர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.