உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் கே.எம்.ஜோசபுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு தருவதற்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, ஒரு நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் தீபக் மிஸ்ராவை இன்று சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது மத்திய அரசு.
10 முக்கிய விஷயங்கள்:
நீதிபதி கே.எம்.ஜோசப் விஷயத்தில் அரசு நடந்து கொண்ட விதம் பாரபட்சமுடையது என்று பல நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரின் பெயரை பரிந்துரைப்பதற்கு முன்னரே கே.எம்.ஜோசபின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்.
சில மாதங்களுக்கு முன்னர் கொலிஜியம், நீதிபதி கே.எம்.ஜோசபின் பெயரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், அவர் பெயரை திரும்ப அனுப்பியது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பெயரை பரிந்துரை செய்தது கொலிஜியம்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அரசு தரப்பு, ‘கே.எம்.ஜோசப், 2004 ஆம் ஆண்டுதான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் இந்திரா பானர்ஜி மற்றும் வினித் சரண் ஆகியோர் 2002 ஆம் ஆண்டே நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதுதான் பெயர் திரும்ப அனுப்பப்படுவதற்குக் காரணம்’ என்று தெரிவித்தது அரசு தரப்பு.
மேலும் நீதிபதிகளின் சீனியாரிட்டி தொடர்பான பட்டியலில், பானர்ஜியின் பெயர் 2வது இடத்திலும், சரணின் பெயர் 3வது இடத்திலும் இருக்கிறது என்றும், 39 வது இடத்தில்தான் கே.எம்.ஜோசபின் பெயர் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
கே.எம்.ஜோசப், மற்ற இருவர்களுக்கு முன்னரே தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறை வட்டாரங்களோ, ‘உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்வது சீனியாரிட்டி ஒன்று மட்டுமே காரணியாக அமையாது’ என்று பதில் வாதம் வைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கே.எம்.ஜோசபின் பெயரை பரிந்துரை செய்தது கொலிஜியம். ஆனால், அதை நிராகரிக்கவே, மறுபடியும் பரிந்துரை செய்தது கொலிஜியம். 2வது முறை பரிந்துரைக்குப் பின்னர் மத்திய அரசு, கொலிஜியத்தின் நிலைப்பாட்டை அங்கீரிக்க வேண்டும் என்பது தான் சட்டம். எனவே, கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார்.
இந்நிலையில் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியதற்கு வேறு காரணம் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் அமலாகியிருந்த ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக ஜோசப் தீர்ப்பளித்தார். இது காங்கிரஸ், அரசு அமைக்க ஏதுவாக ஆனது. அதனால்தான் நீதிபதி ஜோசப்பின் பெயரை மத்திய அரசு திரும்ப அனுப்பியது என்று குற்றம் சாட்டின எதிர்கட்சிகள்.
இதைப் போன்ற ஒரு பிரச்னை நீதிபதிகள் செலமேஷ்வர் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் இடையிலும் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவரும் ஒரே நாளில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். ஆனால், மிஸ்ரா தான் முதலில் நியமனம் செய்யப்பட்டார். அதனால், அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனார்.