மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் இந்திய வீரர்களுக்கு உணவு பரிமாறும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகின்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகின்றன. விளையாட்டு கிராமத்தில் கோட் சூட் உடையுடன் வீரர்களுக்காகத் தட்டில் உணவுகள் ஏந்தி அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் நிற்பதான புகைப்படம் வெளியாகியுள்ளது. இதற்குப் பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தானே ஒரு ஒலிம்பிக் பதக்கம் பெற்றவராக உள்ளதால் அமைச்சர் ராத்தோர் வீரர்களை மதிப்பதைப் பற்றி நன்கு அறிந்துள்ளார். இந்தப் பெருந்தன்மையான செயல் நல்ல எடுத்துக்காட்டு என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்புகைப்படம் ட்விட்டரில் வேகமாக பிரபலமானது.
சில மாதங்களுக்கு முன்பு இவர் ட்விட்டரில் அறிவித்த பிட்னஸ் சாலஞ்சும் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. பிரதமர் மோடியும் இதுதொடர்பான தனது வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.