This Article is From Nov 25, 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து ஏ.கே. அந்தோனியிடமும் கேளுங்கள்”- ராகுலுக்கு நிர்மலா பதில்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் பேசினால்தான் ரஃபேல் விவகாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்று ராகுலுக்கு தெரியவரும் என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா கூறியுள்ளார்

“ரஃபேல் விவகாரம் குறித்து ஏ.கே. அந்தோனியிடமும் கேளுங்கள்”- ராகுலுக்கு நிர்மலா பதில்
Bhopal:

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுபற்றி சிபிஐ விசாரிக்கத் தொடங்கினால் பிரதமர் மோடி சிக்குவது நிச்சயம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார்.

இந்த நிலையில் ரஃபேல் விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ரஃபேல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ராகுல் காந்தி அனைவரையும் தவறாக வழிநடத்தி வருகிறார். ரஃபேல் குறித்து காங்கிரஸ் ஆட்சியின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோனியிடம் ராகுல் காந்தி விசாரிக்க வேண்டும். அவரிடம் கேட்டால்தான் ரஃபேல் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது ராகுல் காந்திக்கு தெரியவரும்.

எங்கு சென்றாலும் மக்களுக்கு பொய்யான தகவல்களை ராகுல் காந்தி அளித்து வருகிறார். இதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. இவ்வாறு நிர்மலா கூறியுள்ளார்.

.