அசாம் மருத்துவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்திருக்கிறார்கள்.
அசாம் மாநிலம் ஜோரத் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கத் தவறிய மருத்துவர் நேற்று முன்தினம் அடித்துக் கொல்லப்பட்டார்.
இங்கு தேவன் தத்தா என்ற 73 வயதாகும் மருத்துவம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஏற்கனவே அவர் ஓய்வு பெற்ற நிலையில், தொழிலாளர்களுக்காக அவரை நிர்வாகம் பணியில் அமர்த்தியிருந்தது.
இந்த நிலையில், சுக்ரா மாஜி என்ற 33 வயதாகும் தொழிலாளி ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த நேரத்தில் மருத்துவர் தேவன் தத்தா அங்கு இல்லை. இதேபோன்று கம்பவுண்டரும் அந்த நேரத்தில் இல்லாமல் இருந்தார்.
இதனால் உயிருக்கு போராடிய தொழிலாளி சுக்ரா, அங்கேயே உயிழிரிழந்தார். இதன் பின்னர் தாமதமாக மதியம் 3.30-க்கு மருத்துவர் தேவன் தத்தா மருத்துவமனைக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தொழிலாளர்கள், சரமாரியாக அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த தேவன்தத்தா அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.
இந்த நிலையில், மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 250 பேருக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.