This Article is From Jun 11, 2018

பாகிஸ்தான்- சீனா இணையும் திட்டத்துக்கு மோடி கடும் எதிர்ப்பு!

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்றார்

சீனாவின் பி.ஆர்.ஐ திட்டத்துக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • எஸ்.சி.ஓ மாநாடு இரண்டு நாட்கள் நடந்தன
  • இந்த ஆண்டு தான் எஸ்.சி.ஓ குழுவில் முழு நேர உறுப்பினரானது இந்தியா
  • பி.ஆர்.ஐ திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
Qingdao:

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் கிங்டாவோவுக்குச் சென்ற மோடி அங்கு நடந்த ஷாங்காய் கோ-ஆப்ரேஷன் ஆர்கனைசேஷன் அல்லது எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு இந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பிரதமர் மோடியே சென்றார்.

இதில் பேசிய பிரதமர் மோடி, `அண்டை நாடுகளுடனும் நல்லுறவுடனும் நல்ல தொடர்புடனும் இருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. எனவே, போக்குவரத்துக்கோ அல்லது இன்னபிற தொடர்புக்கோ முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எங்களின் முழு ஆதரவு இருக்கும். ஆனால், அதே நேரத்தில் இந்தத் திட்டங்கள் எங்களின் இறையாண்மையையும் காக்க வேண்டும்' என்று கறாராக தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தான் வரைக்கும் ஒரு தரை வழிச் சாலையை பெல்ட் அண்டு ரோடு திட்டம் (பி.ஆர்.ஐ) என்ற பெயரில் போட முற்படுகிறது. இந்த சாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத் தான் செல்லும். இது இந்தியாவுக்கு பல நெருக்கடிகளை உண்டு பண்ணும் என்ற கணிப்பினால் தான், மோடி இத்திடத்துக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

மோடி தனது உரையின் போது மேலும், `நேரடியாகவும் டிஜிட்டல் முறையிலும் தொடர்பு ஏற்படுவதால் நாட்டின் நிலபரப்பு குறித்தான கருத்துகளே மாறி வருகின்றன. இந்நிலையில், எஸ்.சி.ஓ நாடுகளுடனும் எங்கள் அண்டை நாடுகளுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம்' என்றார். பி.ஆர்.ஐ திட்டத்துக்கு இந்தியாவைத் தவிர மற்ற எஸ்.சி.ஓ நாடுகள் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

8 உறுப்பினர்கள் கொண்ட எஸ்.சி.ஓ அமைப்பு 42 சதவிகித உலக மக்கள் தொகை, 22 சதவிகித நிலப்பரப்பு, 20 சதவிகித சர்வதேச ஜிடிபி ஆகியவையின் பிரதிநிதியாக இருக்கும். இந்த அமைப்பின் மூலம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு மற்றும் கலாசார ரீதியாகவும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையில் இணக்கம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.