This Article is From Aug 31, 2018

‘பாஜக-வுக்கு எதிராக அணி திரள்வோம்..!’- கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் எதிர்கட்சிகள்

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், ‘கருணாநிதி உறுதியளித்த மது விலக்கை அமல்படுத்துங்கள்’ என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்

‘பாஜக-வுக்கு எதிராக அணி திரள்வோம்..!’- கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் எதிர்கட்சிகள்

Union Minister Nitin Gadkari attended the meeting for the BJP.

Chennai:

நேற்று சென்னையில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு திமுக சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் நாட்டின் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, கருணாநிதியின் சிறப்பு குறித்து பேசினர். மிக முக்கியமாக எதிர்கட்சிகள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து பாஜக-வுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

புகழஞ்சலி கூட்டத்தில் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் கடைசி நேரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிராக இரண்டு கட்சிகள்தான் முதன்முறையாக எதிர்த்து நின்றன. ஒன்று ஜன சங்கம், இன்னொன்று திமுக. இரண்டு கட்சிகளும் காங்கிரஸின் ஆதிக்கத்துக்கு எதிராக தீரமாக களமாடியது. 1975 ஆம் ஆண்டு காங்கிரஸால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையையும் கருணாநிதி எதிர்த்தது கவனத்துக்குரியது’ என்று பேசினார். 

திரிணாமூல் காங்கிரஸின் டெரிக் ஓப்ரெய்ன், ‘அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றாக கைகோத்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டும். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாரா?’ என்று அதிரடியாக பேசினார்.

அவரைத் தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘பிரகடனப்படுத்தப்படாத ஒரு அவசர நிலை, இந்தியாவில் நிலவி வருகிறது. இது 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை விட மோசமானது’ என்று மத்திய அரசைத் தாக்கினார். 

நிதின் கட்கரி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், ‘அவசர நிலை மோசமானது என்றால், தற்போது அதைவிட மோசமான நிலை நாட்டில் நிலவி வருகிறது. கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசின் காவிமயமாக்கலுக்கு எதிராக போரிட்டிருப்பார். தந்தையைப் போலவே காவிமயமாக்கலுக்கு எதிராக ஸ்டாலினும் களமாடுவார்’ என்று பேசினார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவ கௌடா, தேசிய கான்ஃப்ரென்ஸ் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸின் பரஃபூல் படேல் ஆகியோரும் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக-வுக்கு எதிராக பேசினர்.

மேலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆம் ஆத்மி கட்சி சோம்னாத் பாரதி ஆகியோர் மாநில சுயாட்சிக்கு கருணாநிதியின் பங்கு குறித்து பேசினார். 

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், ‘கருணாநிதி உறுதியளித்த மது விலக்கை அமல்படுத்துங்கள்’ என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

.