New Delhi: புதுடில்லி: இந்தியாவின் 10-வது பிரதமரான வாஜ்பாய், சிறுநீரக தொற்று மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வாஜ்பாயின் உறவினர் கந்தி மிஷ்ரா, “விரைவில் அவர் குணமடைவார் என்று கடவுளை பிரார்த்திக்கிறோம். உடல் நலம் முன்னேறி வந்து ஒரு முறை அவர் உரையாட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும் ஆன வாஜ்பாயின் வரிகள் இன்றும் மேற்கோள்களாக பயன்படுத்தப்படுகின்றன. வாஜ்பாயின் 90வது பிறந்தநாளையொட்டி, ‘அடல்ஜி - தி ஜெண்டல் ஜயண்ட்’ என்று பெயரிடப்பட்ட கட்டுரை பாஜக சார்பில் வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவின் சிறந்த பேச்சாளர் வாஜ்பாய்” என்று தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரிக்க, முக்கிய தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்துள்ளனர். நேற்று மாலை பிரதமர் மோடி, வாஜ்பாயை நேரில் சென்று நலம் விசாரித்தார். இது அவர் மருத்துவமனையில் அனுமதித்த பிறகு நான்காவது முறையாகும். மேலும், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, மூத்த பா.ஜ.க தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தனர்