தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் உரையாடுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், பெண் ஒருவருடன் அவர் குரலில் பேசுவது போன்றது உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த ஆடியோவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தான் பேசுகிறார் என்பது போல் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர்.
போலியாக ஆடியோவை தயார் செய்து வெளியிட்டோர் பின்னணியில் டிடிவி குடும்பத்தினர் உள்ளனர். டி.டி.வி.தினகரனைச் சார்ந்தவர்களே ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல என அவர் கூறியுள்ளார்.
மேலும், டி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன்தான் இருக்கிறேனா?. போலி ஆடியோ பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.