This Article is From Dec 24, 2018

அயோத்தி வழக்கு: ஜன.4ல் உச்சநீதிமன்றம் விசாரணை

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இம்மனு விசாரிக்கப்படும்.

ராமஜென்ம பூமி உரிமை வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜன.4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

New Delhi:

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜன.4ஆம் தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முன்னர் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் ஜன.4ஆம் தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இம்மனு விசாரிக்கப்படும். இந்த அமர்வு அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களையும் விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

.