அயோத்தி வழக்கை (Ayodhya case hearing) புதிய அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதி வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 3 பேர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு அயோத்தி வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உடனடியாக மத்திய அரசு அவசர சட்டத்தை ஏற்படுத்தி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலது சாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அயோத்தி வழக்கு விசாரணை தொடர்பான 10 முக்கிய தகவல்கள்:
1. பாபர் மசூதி 1992, டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே தற்போது பிரச்னை எழுந்திருக்கும் 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
2. 2010-ம் ஆண்டின்போது தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான் என்றும் அதன் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மீதமுள்ள இடம் சன்னி சென்ட்ரல் வக்ப் வாரியத்திற்கு சென்று விடும். இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.
3. அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உத்தர பிரதேச அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
4. வழக்கை நாங்கள் விசாரிக்க மாட்டோம். ஆனால் வழக்கு விசாரிக்கப்படும் தேதிகளை முடிவு செய்வோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
5. வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இதையடுத்து, அவசர சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளும், பாஜகவில் ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
6. வலதுசாரி அமைப்புகள், சிவசேனா உள்ளிட்டவை நெருக்கடி கொடுத்தாலும், சட்ட ரீதியில் அயோத்தி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
7. அயோத்தி பிரச்னைக்கு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. தாமதமான நீதி அநீதிக்கு சமம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
8. ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி சிவசேனா விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டவை பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்துள்ளன.
9. மசூதி என்பது இஸ்லாத்துடன் இணைந்தது அல்ல என்று 1994-ம் ஆண்டு தீர்ப்பின்போது குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் மறுத்து விட்டது.
10. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி வலதுசாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.