அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது.
இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது
விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.
அந்த குழு சம்பந்தபட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். எனினும், முடிவு எட்டப்பவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நேற்று மாலை வரை தீர்ப்பு எப்போது வெளிவரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. எனினும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஒய்வு பெறும் நவ.17ம் தேதிக்கு முன்பாக இருக்கும் என்று மட்டும் பரவலாக கூறப்பட்டு வந்தது. இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுவதாக நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியானது.
முன்னதாக நேற்று மாலை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தர பிரதேச உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். அயோத்தி அமைந்துள்ள உத்தரபிர தேசத்தில் குறைந்தது 12,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.