பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் கல்யாண் சிங்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வாங்கியுள்ளது. ரூ. 2 லட்சம் பிணைத்தொகை செலுத்தி கல்யாண் சிங் ஜாமீன் பெற்றிருக்கிறார்.
இந்த தகவலை கல்யாண் சிங்கின் வழக்கறிஞரான மணிஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்தார். இது அரசியலமைப்பு பதவி என்பதால் அவரை கைது செய்வதில் சிபிஐக்கு சிக்கல்கள் இருந்தன. இதற்கிடையே அவரது பதவிக் காலமும் நிறைவு பெற்றது.
இதையடுத்து, கல்யாண் சிங்கை பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன்பின்னர் கல்யாண் சிங் அரசியலமைப்பு பதவியான கவர்னர் பதவியில் இல்லை என்பதை உறுதி செய்யும் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் ராஜஸ்தான் கவர்னர் பதவி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 9-ம்தேதி கல்யாண் சிங் மீண்டும் பாஜகவில் இணைந்து கட்சிப் பணியாற்றினார். இந்த சூழலில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார்.
16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக கல்யாண் சிங் இருந்தார். இந்த வழக்கில் அவரை தவிர்த்து, எல்.கே. அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.