This Article is From Feb 08, 2019

கொடநாடு வழக்கில் திருப்பம்: சயன், மனோஜுக்கு ஜாமீன் ரத்து!

சயன் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஊட்டியில் இருக்கும் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது.

கொடநாடு வழக்கில் திருப்பம்: சயன், மனோஜுக்கு ஜாமீன் ரத்து!

அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, இருவரது ஜாமீனையும் ரத்து செய்தது நீதிமன்றம். 

ஹைலைட்ஸ்

  • சயன், மனோஜ் ஆகிய இருவரும் கொடநாடு வழக்கில் முதல் குற்றவாளிகள்
  • ஆவணப்படத்தில் இருவரும் முதல்வருக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்
  • எடப்பாடியிடம் பல்லாயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக குற்றச்சாட்டு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறி சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இருவருக்கும் சமீபத்தில் வழக்கிலிருந்து ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள நீதிமன்றம் இருவரது ஜாமீனையும் ரத்து செய்துள்ளது. 

கொடநாடு பங்களாவில், சென்ற ஆண்டு அடுத்தடுத்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் உருவானது. இது குறித்து சமீபத்தில் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, ஒரு ஆவணப்படம் வெளியிட்டார். கொடநாடு விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சயன் மற்றும் மனோஜ் அந்த ஆவணப்படத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கொலை மற்றும் கொள்ளையில்' ஈடுபட்டோம் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். 

அந்த ஆவணப்படத்தில், 2,000 கோடி ரூபாய்க்கு சொத்துகள் மட்டும் பல முக்கிய ஆவணங்கள் கொடநாடு பங்களாவிலிருந்து திருடப்பட்டதாகவும், அதனைக் கைப்பற்றித்தான் அதிமுக-வை தனது கைக்குள் முதல்வர் எடப்பாடி வைத்துள்ளார் என்றும் மேத்யூ குற்றம் சாட்டினார். 

இதைத் தொடர்ந்து, மேத்யூ சாமுவேல், சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் சயன் மற்றும் மனோஜுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஊட்டியில் இருக்கும் நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. அதில்தான் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, இருவரது ஜாமீனையும் ரத்து செய்தது நீதிமன்றம். 

.