மண் கோப்பையில் தேநீரை ருசிக்கும் அமித் ஷா.
New Delhi: நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக மண் கோப்பை பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நாட்டில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசும் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடை விதித்துள்ளது. குறிப்பாக தண்ணீர் பாக்கெட்டுகளின் உற்பத்தி அறவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்த கத்ரா வரை செல்லும் 'வந்தே பாரத்' ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், 'ரயில் நிலையங்களில் மண் கோப்பையில் தேநீர் வழங்கும் முறையை இந்திய ரயில்வே தொடங்கி விட்டது. 400 ரயில் நிலையங்களில் மண் கோப்பை பயன்படுத்தப்படுகின்றன.
இவை சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது. அத்துடன் கைவினை கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை அளிக்கிறது. நானும் மண் கோப்பையில் தேநீரை ரசித்துக் குடித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.