Read in English বাংলায় পড়ুন
This Article is From Dec 30, 2018

நிறைவடைந்தது வங்கதேச தேர்தல்: 12 பேர் பலி!

பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தின் முதல் பிரதமரான ஷேக் முஜிபர் ரஹ்மானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
உலகம்

40,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், 60,000 பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்

Dhaka:

கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் நடந்த சூறாவளிப் பிரசாரத்தைத் தொடர்ந்து வங்க தேசத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 4 மணி வாக்கில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

தேர்தலையொட்டி நடந்த கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சிக்கும் எதிர்கட்சியான பிஎன்பி-க்கும் இடையில் நடந்த மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 

இன்று காலை 8 மணி அளவில் வாக்குப் பதிவு ஆரம்பமானது. இந்த முறையும் பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று, 4வது முறையாக ஆட்சி அரியணையல் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

40,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில், 60,000 பாதுகாப்புப் படையினர், பாதுகாப்புக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

நேற்று ஆளுங்கட்சியின் தொண்டரை, பிரதான எதிர்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தொண்டர்கள் அடித்துக் கொன்றனர். இதனால், பல்வேறு இடங்களில் கலவரம் நடந்து வருகிறது. 

Advertisement

ஆளுங்கட்சித் தொண்டர் இறந்தது குறித்து போலீஸ் தரப்பு, ‘அவர் கற்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்' என்று தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கதேசம் 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் 11வது தேர்தல் இது. நவம்பர் 8 ஆம் தேதி, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அன்றிலிருந்து நேற்று வரை 4 பேர் அரசியல் கலவரங்களால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

அதே நேரத்தில் எதிர்கட்சியான பிஎன்பி, ‘எங்கள் கட்சியைச் சேர்ந்த 8 தொண்டர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்' என்று திடுக்கிடும் தகவலை கூறுகிறது. 

10.4 கோடி வாக்காளர்கள், ஆளுங்கட்சியான அவாமி லீக் கூட்டணி மற்றும் பிஎன்பி கூட்டணிக்கு மத்தியில் அடுத்த அரசாங்கத்தைத் தேர்வு செய்ய உள்ளனர். கருத்துக் கணிப்புகள் பிரதமர் ஹசீனாவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. 

வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் இருக்கின்றன. ஹசீனா பெரும்பான்மையைப் பெற 151 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். 

Advertisement

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், ‘வங்க தேசத்தில் பயம் தரக்கூடிய சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட, அப்படி செய்ய அஞ்சுவார்கள். எனவே, தேர்தல் நியாயமாக நடப்பதை அந்த நாட்டு அரசு இயந்திரம் உறுதி செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளன.

அரசு தரப்பில், இன்ற இரவு வரை நாட்டில் உள்ள 3ஜி மற்றும் 4ஜி செல்போன் சேவைகளை முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

ஹசீனாவின் அரசியல் எதிரியும், பிஎன்பி கட்சியைத் தலைமைத் தாங்கி நடத்தி வந்தவருமான கலீதா ஸியாவுக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஹசீனா, தேர்தலில் வென்ற பிறகு வங்கதேசம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிஎன்பி கட்சி, ‘தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை' என்று குற்றம் சாட்டி புறக்கணித்தது. 

Advertisement

ஹசீனா, வங்கதேசத்தின் முதல் பிரதமரான ஷேக் முஜிபர் ரஹ்மானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement