This Article is From May 30, 2020

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிகமாக கடன் வழங்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி கோரிக்கை

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விவசாயம் இன்றியமையாதது என்பதால், விவசாயிகளுக்குக் கடன்களை உடனுக்குடன் வழங்கி வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிகமாக கடன் வழங்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிகமாக கடன் வழங்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகமாக கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஊரடகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதாரத்தை மேம்படுத்திட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் பல்வேறு புதிய திட்டங்களை சமீபத்தில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏறத்தாழ 5 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் சுமார் 1 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு சுமார் 30% ஆகும்.

அரசின் சிறப்பு சலுகைத் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவி அதிக அளவில் நம் மாநிலத்துக்குக் கிடைக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனை வங்கிகள் வழங்க வேண்டும். இத்தொழில்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. 2018-2019 ஆம் ஆண்டு 8,023 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுதவியின் வருடாந்திர வளர்ச்சி 4% என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இந்த சதவீதத்தைப் பெரிய அளவில் வங்கிகள் உயர்த்திட வேண்டும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு விவசாயம் இன்றியமையாதது என்பதால், விவசாயிகளுக்குக் கடன்களை உடனுக்குடன் வழங்கி வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சத்து 20 ஆயிரம் உழவர் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடன் அட்டையின் மூலம் விவசாயிகள், 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்க வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

நீங்கள் அனைவரும் உங்கள் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, இந்த உழவர் கடன் அட்டைகள் மூலம் கடன்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.