Bharat Bachao Rally: தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ‘பாரத் பச்சாவ்' என்கிற பேரணியை நடத்தி வருகிறது காங்கிரஸ். பொருளாதார மந்தநிலை, குடியுரிமை சட்டம், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி மத்திய அரசுக்கு எதிராக கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது காங்கிரஸ். இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல், “தனி ஆளாக இந்திய பொருளாதாரத்தை அழித்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி,” என்றார்.
அவர் மேலும், “நரேந்திர மோடிஜி ஆட்சிக்கு வந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார். கருப்புப் பணத்தை திரும்பிப் பெற இந்நடவடிக்கை என்று உரையாற்றினார். ஆனால், என்ன நடந்தது. அந்த நடவடிக்கையால் இன்று வரை இந்திய பொருளாதாரத்தால் மீண்டு வர முடியவில்லை.
அந்த நேரத்தில் நாடு, 9 சதவிகித வேகத்தில் வளர்ந்து வந்தது. சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா ஒப்பிடப்பட்டது. ஆனால், இன்று பாருங்கள். மக்கள் வெங்காயத்துக்காக வரிசையில் நிற்கிறார்கள். வெங்காயத்தின் விலை இப்போது கிலோவுக்கு 200 ரூபாயைத் தொட்டுள்ளது,” என்று அதிரடியாக பேசினார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பாஜக ஆட்சியில் இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மேற்கு வங்கம் மற்றும் டெல்லியிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் காங்கிரஸ், மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் பேரணி நடத்தியுள்ளது.
வடகிழக்கின் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இந்தப் போராட்டங்கள் காரணமாக தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
காங்கிரஸ், பாஜகவை பல்வேறு விஷயங்களில் குற்றம் சாட்டியிருந்தாலும், அரசு தரப்பிலிருந்து ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. இன்று பிரதமர் மோடி, கான்பூரில் 'நமாமி கங்கா' என்ற கங்கைக்கான செயல் திட்டத்தை மேற்பார்வையிட உள்ளார்.