மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பலம் பொருந்திய சிவசேனாவும், பாஜக-வும் கூட்டணி வைத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கும் என்று தகவல் வந்துள்ளது. இரண்டு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் சரிசம இடங்களில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வந்தது. குறிப்பாக சிவசேனா, பிரதமர் மோடி மற்றும் பாஜக-வை கடுமையாக சாடியது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் எதிரெதிரணியில் நின்று போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தது. குறிப்பாக கடந்த பல நாட்களாக சிவசேனாவின் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக முக்கிய புள்ளிகள் திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக, கூட்டணி குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 48 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25 இடங்களிலும் சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிகிறது. உத்தர பிரதேசத்திற்குப் பிறகு மகாராஷ்டிராவில்தான் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் கூட்டாளிகளாகத்தான் இருந்தன. தேர்தலில் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டன. ஆனால், 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இருவரும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தனர். ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
சிவசேனா, பாஜக-வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்தாலும், பாஜக-வையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது. ஆனால், இப்போது இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த முரண் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து, இந்த முறை லோக்சபா தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சிவசேனாவும் பாஜக-வும் பிரிந்து நின்றால், அது எதிரணிக்குச் சாதகமாக மாறிவிடும் என்று கணக்கு போட்டுள்ளது சிவசேனா கட்சித் தலைமை. இதுவே கூட்டணி உடன்பாடுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், பாஜக-வுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுப்பதிலும், சிவசேனா தாராளம் காட்டியுள்ளதாக தகவல். இதற்குக் காரணம், அடுத்த வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டுள்ளதாக தெரிகிறது. அதை மனதில் வைத்து தற்போது சிவசேனா சமரசம் செய்து கொண்டுள்ளது.