5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சத்தீஸ்கரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. மத்திய அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தி 2 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து அவர், ‘பணமதிப்பிழப்பு நடந்தவுடன், பெரும் பணக்காரர்கள் யாராவது தங்களின் காரிலிருந்து இறங்கி, வங்கியின் வாசலில் நிற்பதைப் பார்த்தீர்களா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அவரின் இந்த கேள்விக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘பார்த்தோம். நீங்கள் உங்கள் காரிலிருந்து இறங்கி, வங்கிக்கு முன்னர் இருந்த வரிசையில் நின்றீர்கள்' என்று கிண்டல் ரிப்ளை கொடுத்துள்ளார்.
அவர் மேலும், ‘4 தலைமுறைகளாக காந்தி குடும்பம் பதுக்கி வைத்த சொத்துகள் பணமதிப்பிழப்புக்குப் பின்னர் பாதிப்படைந்தது. நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையால் தான், தீவிரவாதிகளுக்கு நிதி சென்று சேர்வது தடுக்கப்பட்டது, வரி கட்டுவது அதிகரித்தது, கருப்புப் பணம் வெளிக் கொண்டு வரப்பட்டது' என்று பேசினார்.
முன்னர் பணமதிப்பழப்பு நடவடிக்கை குறித்து ராகுல், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப் பெரும் ஊழல். மோடியின் ‘பெரிய' நண்பர்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை அது' என்று கடுமையாக சாடினார்.