சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளால் பாஜக தனது கூட்டணி கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக, ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசிய தலைமை பேசிவருவதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்திருப்பதால் கூட்டணி அமைப்பதில் பாஜகவுக்கு சிக்கல் எற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகளை ஒதுக்கும் கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வியூகத்தை வகுப்பதில் பாஜக தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரான ராம் மாதவ் கூறுகையில், ''கூட்டணி கட்சிகள் கூடுதல் சீட்டுகளை எதிர்பார்க்கின்றன. அதற்கு பாஜக தயாராக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பீகாரின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த உபேந்திர குஷ்வாகா பாஜக கூட்டணியை விட்டு விலகினார். அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததே விலகியதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மெகபூபா முப்தி, உபேந்திர குஷ்வாகா ஆகிய முக்கிய கூட்டணி தலைவர்களை பாஜக இழந்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஆளும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. அடுத்த மாதம் தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரமாண்டமான முறையில் வரவேற்பதற்கு அதிமுக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று, அரசியலில் புதிதாக நுழைந்திருக்கும் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்கவும் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியான திமுக ரஜினிகாந்த் விரைவில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறது.