சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் வேட்பாளராக ராகுலின் பெயரை முன் மொழிந்த ஸ்டாலின், அதனை கொல்கத்தா மாநாட்டில் ஏன் செய்யவில்லை என்று தமிழிசை சவுந்தர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணா சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளின் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவில்லை. இன்று வரையிலும் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க தயங்கி வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மாநாட்டை நேற்று நடத்தினார்.
இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த விவகாரம் குறித்து பாஜக அரசின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நெல்லையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
சென்னையில் பிரதமர் வேட்பாளராக ராகுலின் பெயரை அறிவித்த ஸ்டாலின், கொல்கத்தா மாநாட்டில் ஏன் அவ்வாறு செய்யவில்லை?. கொல்கத்தாவில் நடைபெற்றது ஒரு வேடிக்கையான கூட்டம். ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்திருந்தால், மேடையில் அதனை அறிவித்து மற்ற தலைவர்களிடம் அவர் கருத்து கேட்டிருக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.