அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய மத்திய பிரதேச எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்க்கியா சிறையிலிருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் -3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக உள்ளாட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
''அப்போது 5 நிமிடத்தில் அதிகாரிகள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு'' என்று எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்ட ஆரம்பித்தார்.