அமெரிகாகவின் மோன்டானாவில் இருக்கும் குடும்பம் ஒன்று, வெள்ளிக் கிழமை காலை எழுந்தபோது, அழைய விருந்தாளி ஒருவர் இருந்துள்ளார். அந்த விருந்தாளி ஒரு கரடி. இது குறித்து உள்ளூர் காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டுக்கு உள்ளே புகுந்த அந்த கரடி, ஓர் அறையினுள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து உடைத்துள்ளது. பின்னர், அறையில் இருந்த பரணை மீது ஏறி சொகுசாக படுத்து உறங்கியுள்ளது.
“நாங்கள் புகார் வந்த வீட்டிற்கு சென்றபோது, ஒரு கருங்கரடி வீட்டின் ஓர் அறைக்குள் சென்று அதைப் பூட்டிக் கொண்டதை கண்டோம். உள்ளே மாட்டிக் கொண்டோம் என்றுணர்ந்த அந்த கரடி, கண்ணில் பார்த்த அனைத்தையும் துவம்சம் செய்துள்ளது. பின்னர் அசதியாகி அப்படியே பரணை மீது ஏறி உறங்கிவிட்டது” என்று சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையான ஷெரிஃப் அலுவலகத்தின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெரிஃப் அலுவலகத்தில் இருந்து சென்றவர்களைக் கண்ட கரடி, கீழே வர மறுத்தது. தொடர்ந்து அவர்கள் மயக்க மருந்து கொடுத்து கரடியைப் பிடித்துச் சென்றனர்.
கரடி குறித்த பதிவிடப்பட்ட போஸ்ட் மற்றும் படங்கள்:
ஷெரிஃப் அலுவலக முகநூல் பதிவில், “உங்கள் வீடுகளை சரியாக பூட்டி வைத்துவிட வேண்டும் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த பதிவு இணையத்தில் வைரலானது. ஒருவர் இது குறித்து, “கரடியை நீங்கள் அன்புடன் நடத்தியது மகிழ்வளிக்கிறது” என்று நெகிழ்ந்துள்ளார். இன்னொருவர், “கரடி பிடிக்கப்பட்டு, அது பொதுவாக புழங்கும் இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்பட்டது சந்தோஷம்” என்று புகழ்ந்துள்ளார்.