ஹைலைட்ஸ்
- ராஜஸ்தான் அல்வரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி
- இது தான் ஈவு இரக்கமற்ற மோடியின் புதிய இந்தியா, ராகுல்
- அல்வர் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
New Delhi: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரில் மத்திய அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, ரக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன் 4 மணி நேரங்களாக போலீஸாருடனிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்து உயிருக்கு போராடி வந்த ரக்பரை கும்பலிடம் இருந்து மீட்டு, மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இடையில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் போலீஸ் இருந்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் கூறப்படுகிறது. பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி காட்டமான விமர்சனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘அல்வாரில் இருக்கும் போலீஸார், இறக்கும் நிலையில் இருந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணி நேரம் ஆக்கியுள்ளனர். ஆனால், மருத்துமனை 6 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்துள்ளது. ஏன்? போகும் வழியில் அவர்கள் ஒரு டீ பிரேக் எடுத்துள்ளனர். இது தான் ஈவு இரக்கமற்ற மோடியின் ‘புதிய இந்தியா’. இதில் மனிதாபிமனம் வெறுப்பாக மாறியுள்ளது’ என்று கடுகடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த ‘பசுவதை’ தாக்குதல்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்வாரில் நடந்த சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ராஜஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் தொடர்ச்சியாக நடந்த வரும் இந்த கும்பல் வன்முறைகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி சமூக செயற்பாட்டாளர் தேசீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.