This Article is From Nov 28, 2018

சபரிமலைக்குச் சென்ற பி.எஸ்.என்.எல் பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

சபரிமலைக்குச் சென்ற பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியரும் செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமா, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

சபரிமலைக்குச் சென்ற பி.எஸ்.என்.எல் பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, பாத்திமா, ஐயப்ப பக்தர் போல கருப்பு உடையணிந்து பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்

Pathanamthitta:

சபரிமலைக்குச் சென்ற பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியரும் செயற்பாட்டாளருமான ரெஹானா பாத்திமா, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, பாத்திமா, ஐயப்ப பக்தர் போல கருப்பு உடையணிந்து பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அப்போது படத்துடன் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து சபரிமலை விவகாரங்களுக்காக தொடர்ந்து போராடி வரும் சபரிமலை சம்ராக்‌ஷனா சமிதி என்கின்ற வலதுசாரி அமைப்பு, பட்டனம்திட்டா காவல் நிலையத்தில், பாத்திமாவுக்கு எதிராக புகார் அளித்தது. புகாரில், ‘இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில் ரெஹானா பாத்திமா சமூக வலைதளத்தில் கருத்திட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பிட்டிருந்தது.

இதையடுத்து போலீஸார், பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின், டெக்னீசியனாக பாத்திமா பார்த்து வந்த பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாத்திமா, சபரிமலைக்குத் தனது நண்பர் ஒருவருடன் சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஐயப்பன் கோயில் அருகில் வரை அவர் சென்றுவிட்டார். ஆனால் கோயிலுக்கு அருகாமையில் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தரிசனம் செய்யாமல் மீண்டும் கீழே இறங்கி வந்துவிட்டார்.

கடந்த செப்டம்பர் 28 ஆம் நாள், உச்ச நீதிமன்றம், 10 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்றிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. தீர்ப்பையடுத்து, பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட கோயிலுக்கு உள்ளே செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.