உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷார் பகுதியில் கோவிலுக்குள் வைத்து இரண்டு சாதுக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 55 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு சாதுக்களைக் கொலை செய்ததற்காக ராஜு என்கிற நபரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உள்ளூர் மக்கள் சாதுக்கள் இருவரோடு சேர்த்து வாகன ஒட்டுநரையும் தாக்கி கொலை செய்தார்கள். இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மகாராஷ்டிரா முதல்வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, உத்தரப் பிரதேச முதல்வரை தொலைப்பேசியில் அழைத்து, “புலந்த்ஷார் கொலை நிகழ்வினை வகுப்புவாத பிரச்சினையாக மாறாமல் பார்த்துக்கொள்ளுமாறும். அனைத்துவிதத்திலும் மகாராஷ்டிரா உங்களோடு இருக்கும்.“ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட ராஜு என்கிற நபரிடம் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், “இது கடவுளின் விருப்பம்“ என அவர் கூறியுள்ளார். மேலும், தன்னிடம் கஞ்சா இருப்பதாக கூறி அவர் கோயிலுக்குள் நுழைந்ததாகவும், பின்னர் லத்தியை கொண்டு தாக்கியதாகவும் கூறியுள்ளார் என மாநில அரசு மூத்த அதிகாரி ரவீந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த கொலைக்கு வகுப்புவாத காரணங்களை உத்தரப் பிரதேச அரசு மறுத்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மீதான விசாரணை இன்னும் முழுமையடையவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
“புலந்த்ஷார் பகுதியின் கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகள் இருந்துள்ளனர். அந்த கோவிலிருந்து இடுக்கி போன்ற பொருளினை ராஜு என்கிற நபர் எடுத்துச் சென்றதால் பூசாரிகள் ராஜுவை திட்டியுள்ளனர். இந்த நேரத்தில் நடந்த வாக்குவாதமே கொலைக்கான காரணம். ராஜு என்கிற நபரை கிராம மக்கள் தேடி சென்ற போது அந்த நபர் கஞ்சா போதையிலிருந்துள்ளார். அங்கு போதை பொருட்களும் இருந்துள்ளன.“ என மூத்த போலீஸ் அதிகாரி சந்தோஷ்குமார் சிங் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு முடிவதற்குள் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. புலந்த்ஷார் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் நெருக்கடியின் மத்தியில் பதற்றத்தைத் தூண்டுவதற்கான முயற்சி இது, என்று மகாராஷ்டிராவின் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
“உத்தரப் பிரதேச முதல்வரை தொலைப்பேசியில் அழைத்து நடந்த சம்பவம் குறித்து விவாதித்துள்ளேன். இது போன்ற சம்பவங்களுக்கு எதிரா மகாராஷ்டிரா உத்தரப் பிரதேசத்தோடு நிற்கும். எங்கள் மாநிலத்தில் நடந்த சம்பவத்தில் நாங்கள் மேற்கொண்ட கைது நடவடிக்கை போல நீங்களும் சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்து வகுப்புவாத பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என தான் நம்புகிறேன்” என தெரிவித்ததாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே இன்று ட்வீட் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா சம்பவத்தில் தொடர்புடைய 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்த போது, அவர்களில் ஒருவர் கூட மாற்று மதத்தினர் இல்லை எனவே இது வகுப்புவாத பிரச்சினை இல்லை என உத்தவ் விளக்கமளித்த போதிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சம்பத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ்விடம் கேட்டுக்கொண்டார்.
மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தினை வகுப்புவாத சம்பவமாக சித்தரிக்க முயன்றதுபோல் தற்போது உத்தரப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ள இரண்டு சாதுக்களின் கொலையையும் வகுப்புவாத பிரச்சினையாக்க முயல வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாக மகாராஷ்டிராவின் சிவசேனா அரசியல் தலைவர் சஞ்சய் ரவுத் ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் உத்தரப் பிரதேச சம்பவத்தினை அரசியலாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.