உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரில் பசு சடங்கள் தொடர்பான வன்முறையில் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங் தளத்தை சேர்ந்த யோகேஷ் ராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
புலந்தசாரில் பசு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை கொன்றவர்களை கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்தன. இதன்பின்னர் ஏற்பட்ட வன்முறையின்போது அதனை கட்டுப்படுத்த வந்த காவல் அதிகாரி சுபோத் குமாரை வன்முறையாளர்கள் கோடரியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.
இந்த வழக்கில் நம்பர் ஒன் குற்றவாளியான பஜ்ரங் தளத்தை சேர்ந்த யோகேஷ் ராஜ் தேடப்பட்டு வந்தார். சுபோத் குமார் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளிவந்தன. இருப்பினும் குற்றவாளி யோகேஷ் ராஜை கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறி வந்தது.
இந்த நிலையில் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்தவர்களே யோகேஷ் ராஜை போலீசில் ஒப்படைத்துள்ளனர். காவல் அதிகாரி சுபோத் குமார் கொல்லப்பட்டது தொடர்பாக 30-க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்திருந்தனர்.
கடந்த 1-ம்தேதி கலுவா என்பவரை போலீஸ் கைது செய்திருந்தது. அவர் சுபோத் குமாரின் கை விரல்களை கோடரியால் வெட்டித் துண்டாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.