மகாராஷ்டிராவில் திருடன் என்ற சந்தேகத்தில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில், கடந்த ஆக.21ஆம் தேதியன்று, ரஞ்சித் பாண்டே என்பவர் பேருந்தின் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியே சென்ற சிலர் ரஞ்சித் பாண்டேவை பேட்டரி திருடன் என்று நினைத்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரஞ்சித் பாண்டே அருகில் உள்ள மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே, அங்கிருந்து, குஜராத்தின் வாலசாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமைனையில் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, கொலை, சட்டவிரோத செயலில் ஈடுபட்டது மற்றும் கலகம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அன்வர் கராஜ்வல்லா, அவரது சகோதரர் மிந்து, இரண்டு கூட்டாளிகள் மற்றும் இரண்டு நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது போய்சர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சமீப காலமாக இது போன்ற கும்பல் தாக்குதல் என்பது நாடுமுழுவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)