This Article is From Sep 11, 2018

தெலங்கானா: பள்ளத்தில் பஸ் விழுந்து 6 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழப்பு

கொண்டகாட்டுவில் இருந்து ஜகிடாலுக்கு திரும்பிக் கொண்டிருந்த பஸ் ஷைனிவரபேட் அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள், 20 பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்

Hyderabad:

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று பயங்கரமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் பஸ் விழுந்ததில் 6 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

கொண்டகாட்டுவில் இருந்து ஜகிடாலை நோக்கி சுமார் 70 பேருடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஷைனிவரபேட் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்திற்குள் பஸ் விழுந்தது.

இதனால் பேருந்துக்குள் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து ஜகிடால் மாவட்ட ஆட்சியர் ஏ. ஷரத் கூறும்போது, “காலை 11.45-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. படுகாயம் அடைந்தவர்களை வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம் என்றார்.

சம்பவ இடம் மற்றும் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 குழந்தைகள் மற்றும் 20 பேர் பெண்கள் ஆவர். பஸ்ஸின் பிரேக் செயல் இழந்ததுதான் விபத்துக்கான காரணமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதல் அமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

.