This Article is From Apr 30, 2019

4 தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் நிறைவு! 221 பேரின் மனுக்கள் இன்று பரிசீலனை!

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. மே 2-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் இறுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் 4 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஒட்டபிடாரத்தில் தேர்தல் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், திமுக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர்.சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல், அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.முனியாண்டி, ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. பரிசீலனையின் போது தகுதியற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் மே 2-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

அதன்பிறகு, வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரியவரும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement