This Article is From Mar 28, 2019

3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல்களை நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி திமுக-வின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல்களை நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

விடுப்பட்ட 3 தொகுதிளுக்கான இடைத்தேர்தல்களை வரும் ஏப்ரல் 18 அன்று நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒட்டப்பிடாரம் வழக்கையும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார். மேலும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் திடீரென உயிரிழந்தார். அதனால், சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், முன்னதாக வரும் 28ம் தேதியே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும். அவசர கதியில் நடத்த முடியாது என கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், ஏப்ரல் 18-ல் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி திமுக-வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. முன்னதாக 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராகவே உள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.