கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது, அவர் நலமுடன் இருப்பதாகவும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவருக்கு லேசான அறிகுறிகளே தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டினுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அவர் உடல்நலத்துடன் இருக்கிறார். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகிறார்.
எனினும், பிரதமர் தனது கடமைகளை வழக்கம் போல், முழுமையாகச் செய்வார் என்றும், நாளை கனடா மக்களுடன் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து திரும்பிய சோபி கிரிகோயருக்கு நேற்று இரவு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.