தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்த கான்ட்ராக்டுகளை வழங்கினார் என்றும், இதில் ரூ. 3,500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் திமுக குற்றம்சாட்டி வந்தது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், கான்ட்ராக்டுகளை வழங்கும் கமிட்டியின் தலைவராக முதல்வர் உள்ளார். அவர் தனது நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் கான்ட்ராக்ட் வழங்கவில்லை. தூரத்து உறவினர்களுக்கு மட்டுமே கான்ட்ராக்ட் வழங்கியுள்ளார். கான்ட்ராக்டின் தொகை இடத்திற்கு இடம் மண் உள்ளிட்ட காரணங்களால் மாறுபடும் என்றார்.
இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.