தமிழக அளவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இப்படி அரசு தரும் உதவித் தொகை சட்டத்துக்கு புறம்பானது என்று கோரி ‘சட்ட பஞ்சாயத்து இயக்கம்', சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி, ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மீனவத் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும்.
இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதையும் ராமதாஸ் வரவேற்று, ‘அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில், சட்ட பஞ்சாயத்து இயக்கம், ‘அரசின் இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனுவில் கோரியுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.