சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இடைத்தேர்தலை நடத்தினால், அதன் முடிவுகள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அதன் காரணமாக தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை சுட்டிக்காட்டிய தலைமை தேர்தல் அதிகாரி, சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடிந்த பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ரமேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்ல என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தையும், மக்களையும் தவறாக வழி நடத்துகிறது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.