இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பேருந்துகளில் பண பரிவர்த்தனையை இணைய வழியில் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,
மாநிலம் முழுவதும் தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும், போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக வெளிவரக்கூடிய தகவல்கள் உண்மையில்லை என மறுத்துள்ளார். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் “போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்து கழகங்கள் முன்வர வேண்டும்!“ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில், பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தைகள் அமைந்துள்ளதால் அங்கு பேருந்து போக்குவரத்து இயக்கப்படவில்லை. சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு நாளை முதல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது 2 அரசு பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணங்களே தற்போது வசூலிக்கப்படுகின்றது என்றும் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.