இலங்கை சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பூனை ஒன்று காவல்துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கு வெளியிலிருந்து போதைப்பொருள், செல்போன்கள் போன்றவை சட்டவிரோதமாக சப்ளை செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக சிறைச்சாலை மதில்சுவர் அருகே செல்போன் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறைக்காவலர்கள், பூனையின் மூலமாக செல்போன், போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைச்சாலையில் ஒரு பூனையை கண்டுபிடித்தனர்.
பூனையின் கழுத்தில் ரகசிய குறியீடு, சிம் கார்டுகள், ஹெராயின் போதைப்பொருள் பொட்டலங்கள் கட்டப்பட்டு இருந்தன. அதனைக் கைப்பற்றிய போலீசார், பூனையையும் சிறைச் சாலையில் அடைத்துவிட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்ட பூனை திடீரென தப்பிச்சென்று விட்டது. இப்போது தப்பிச் சென்ற பூனையை மீண்டும் பிடிக்கும் பணியில் சிறைக்காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் சப்ளை செய்த பூனை, காவலர்களுக்கு தலைவலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.