This Article is From Feb 09, 2020

‘காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவராது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

‘காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டது திமுகதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு திமுகதான் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி திமுகவினர் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். அவர்கள் என்னதான் பிரசாரம் செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

நெடுவாசலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர். முதல்வர், அமைச்சர்களைப் பற்றிப்பேசி அவர்கள் ஆதாயம் பெற முயல்கின்றனர்.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 13 ஏக்கர் அளவுள்ள கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்புகள் உள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் பந்து வீச, தமிழக முதல்வர் சிறிது நேரம் பேட் செய்தார்.

.