This Article is From Jul 08, 2020

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி குடியுரிமை, மதச்சார்பின்மை பாடத்திட்டங்களை நீக்குகிறது CBSE!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, "ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை", "சாதி, மதம் மற்றும் பாலினம்" மற்றும் "ஜனநாயகத்திற்கு சவால்கள்" பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி குடியுரிமை, மதச்சார்பின்மை பாடத்திட்டங்களை நீக்குகிறது CBSE!

ஹைலைட்ஸ்

  • கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி மதச்சார்பின்மை பாடதிட்டம் நீக்கம்
  • 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும்: CBSE
  • 9 முதல் 12 ஆம் வகுப்பு பொருளாதாரம் பாடத்திட்டங்களில் மாற்றம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது பள்ளி, கல்லூரிகளும் பொருந்தும். எனவே கல்வி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்த காரணத்தினால் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையை குறைக்க சிபிஎஸ்சி(CBSE) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்கள் கைவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் "அசாதாரண நிலைமை" காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களை சிபிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது.

இதில் 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

'உள்ளூர் அரசு'(Local Government) அத்தியாயத்திலிருந்து 'எங்களுக்கு ஏன் உள்ளூர் அரசாங்கங்கள் தேவை?' மற்றும் 'இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி' என்கிற இரு அலகுகள் நீக்கப்பட்டுள்ளன.

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து, "தற்கால உலகில் பாதுகாப்பு", "சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள்", "இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள்" மற்றும் "பிராந்திய அபிலாஷைகள்" ஆகியவற்றை சிபிஎஸ்சி முற்றிலுமாக நீக்கியுள்ளது.

"திட்டமிடப்பட்ட அபிவிருத்தி" அத்தியாயத்திலிருந்து, "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையை மாற்றுவது" மற்றும் "திட்ட ஆணையம் மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள்" ஆகிய அலகுகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த அத்தியாயத்திலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் என்கிற பகுதியும் கைவிடப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே போல இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த அத்தியாயம் பொருளாதார பாடத்திட்டத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, "ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை", "சாதி, மதம் மற்றும் பாலினம்" மற்றும் "ஜனநாயகத்திற்கு சவால்கள்" பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

.