This Article is From Nov 24, 2018

சென்னை வந்த மத்திய குழு… இன்று முதல்வருடன் ஆலோசனை!

மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, புயல் பாதித்த இடங்களை இன்று பார்வையிட உள்ளது

சென்னை வந்த மத்திய குழு… இன்று முதல்வருடன் ஆலோசனை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, புயல் பாதித்த இடங்களை இன்று பார்வையிட உள்ளது.

நவம்பர் 16 ஆம் தேதியன்று, நாகப்பட்டினம் - வேதாரண்யத்திற்கு இடையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது கஜா புயல். இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும், தென் மாவட்டங்கள் பலவற்றையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா கோரத் தாண்டவம் ஆடியது. புயலால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்துள்ளன. பல இடங்களுக்கு ஒரு வாரம் கடந்தும், இன்னும் மின்சாரம் கொடுக்கப்படவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜா சேதங்கள் குறித்து விளக்கி நிவாரணம் பெறும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடத்தில் கோரினேன். அதற்கு உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், கஜா புயல் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1,500 கோடி ரூபாய் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்த மத்திய குழு, இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாளை மற்றும் நாளை மறுநாளில், புயல் பாதித்த இடங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வரிசையாக ஆய்வு மேற்கொள்கின்றனர். பிற மாவட்டங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என்று தெரிகிறது. 26 ஆம் தேதி மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

பின்னர் மத்திய அரசுக்கு, அந்தக் குழு அறிக்கை சமர்பிக்கும். அதைத் தொடர்ந்து தான் மத்திய அரசின் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப்படும்.

.