This Article is From Jul 30, 2019

நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்!

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும்.

நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்!

நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலளாரும், எம்.பியுமான வைகோ இன்று மாநிலங்களவையில் பேசியதாவது, இந்த நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கின்றது.

இங்கே சுரங்கம் தோண்டும் போது, கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். அதேபோல, தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும். மேலும், இந்த ஆய்வகத்தில் அணுக் கழிவுகளை வைத்து பாதுகாக்கப் போகின்றோம் என்று இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை நான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது, அது எழுத்துப் பிழை என்று மத்திய அரசு வாதாடியது. இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். 

அப்போது, இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற, மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினேன். எனவே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ம் நாள் மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து இருக்கின்றது.

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும். எனவே, நாகசாகி ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

கேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோர் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என்று அவர் கூறினார்.

தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

.