This Article is From Jul 18, 2019

வரும் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு

கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஏவுதலுக்கு தயாராக இருந்த சந்திரயான்-2 ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் முன்னதாக நிறுத்தப்பட்டது.

சந்திரயான் 2 வருகிற 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

New Delhi:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், வருகிற 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. 

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில், நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பெற இருந்தது. 

அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

ஒருநாளுக்கு முன்னதாகவே கவுன்டவுன் தொடங்கப்பட்ட நிலையில் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

இதுதொடர்பாக, இஸ்ரோவை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த பிரச்சினை முன்னதாகவே கண்டறியப்பட்டு சரிசெய்யப்படாமல் விட்டிருந்தால், சந்திரயன்-2  விண்கலம் தோல்வி அடைந்திருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

1nkp9e54

மேலும், இந்த கோளாறு தீவிரமானதுதான், ஆனால் அதனை சரிசெய்வது எளிதானது. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் இந்த கோளாறை கண்டுபிடித்தோம். விழிப்புணர்வு, பிரார்த்தனை மற்றும் இந்தியர்களின் நல்வாழ்த்துக்கள் இந்த பயணத்தின் மொத்த தோல்வியையும் தவிர்க்க உதவியது என்று அவர் கூறினார்.

இதையடுத்து சந்திரயானை நிலவுக்கு அனுப்பும் சூழல் வரும் 21, 22ஆம் தேதிகளில் உள்ளதாகவும், அதைத் தவறவிட்டால் செப்டம்பரில்தான் அனுப்ப முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு, கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக சீர்செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கோளாறு முழுமையாகச் சரி செய்யப்பட்டு விட்டதை அடுத்து, வரும் 22 ஆம் தேதி மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

.