This Article is From Dec 21, 2018

தயாரிப்பாளர் சங்க அலுவலக சீலை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த மோதலையடுத்து, நேற்று சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது. அதன்பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உண்டானதால் சீல் வைக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்க அலுவலக சீலை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து சங்க தலைவர் விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார்.அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான பல புகார்களை எதிர் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.

அதில் டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டிட்டனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை 11 மணியளவில் விஷால், தனது ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் சென்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பினர் போட்டிருந்தப் பூட்டை விஷால் உடைக்க முயன்றார்.

அவரை கைது செய்த போலீசார் பின்பு மாலையில் விடுவித்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தியாகராய நகரில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால், நீதிமன்றத்தை அணுகுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகினர். அவர்கள் தங்களது மனுவில் தங்களது அன்றாட அலுவல்களை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதனை ஏற்று வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்க அலுவலத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

.