This Article is From Feb 11, 2019

ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் விவகாரத்தை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதில் ஜெயலலிதா உறவினர்கள், உடன் இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஹைலைட்ஸ்

  • நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து விசாரிக்கிறது
  • கமிஷனில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை
  • இடைக்கால தடை விதிக்க அப்போலோ நிர்வாகம் வலியுறுத்தியது

சென்னை அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 6-ம்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவின் நண்பர்கள், உறவினர்கள், சிகிச்சை அளித்தவர்கள், உடன் இருந்தவர்கள் என பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் , அப்போலோ மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்படுகின்றனர். ஆனால் விசாரணை ஆணையத்தில் மருத்துவ அதிகாரிகள் யாரும் இல்லாததால், தங்களது மருத்துவர்கள் அளிக்கும் தகவல்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனை குறிப்பிட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 
 

.